பாண்டியர் குடைவரைக் கோயில்
Rock-cut Cave temple of the Pandyas
அமைவிடம்
ஊரின் அருகில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ளது
வரலாற்றுக்காலம்
பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
மகிபாலன்பட்டி குடைவரைக் கோவில் பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டில், முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டது. இவ்விடத்தில் உள்ள கருவறையில் சிவலிங்கமும், கருவறைக்கு இடப்பக்கம் உள்ள கோட்டத்தில் விநாயகரின் புடைப்புச் சிற்பமும் காணப்படுகின்றன. இக்குடைவரைக் கோவில் மிகச் சிறியதாகவும், எளிமையான தோற்றத்துடனும் காணப்படுகிறது. கருவறைப் பகுதியை மட்டும் கொண்ட குடைவரைக் கோவிலான இது, ஊரின் புறத்தேயுள்ள குன்றின் மேற்குப்புற முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் காணப்படும் சிவலிங்கம், சதுர வடிவ ஆவுடையாருடன் தாய்ப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் கருவறைக்கு இடப்பக்கம், ஒரு கோட்டம் அமைக்கப்பட்டு, அதனுள் பெரிய பிள்ளையார் புடைப்புச் சிற்பம் அதே தாய்ப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் அமைந்துள்ள குடைவரையின் வாயிலில் இரண்டு பக்கங்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இதில் வலப்பக்கச் சுவரில் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெரிய கல்வெட்டில், மன்னன் சுந்தர பாண்டியனின் பத்தாம் ஆட்சி ஆண்டில் இக்கோவிலுக்குக் கொடை அளிக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது. கல்வெட்டில் ’பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ என்னும் ஊரில் இக்கோவில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் மகிபாலன்பட்டி என்றழைக்கப்படும் இப்பகுதி, பழங்காலத்தில் ’பூங்குன்றம்’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
ஊர்
மகிபாலன்பட்டி
மாவட்டம்
சிவகங்கை
தகவல்
க.த. காந்திராஜன்
குறிப்புகள்
சிவகங்கை மாவட்டம் தொல்லியல் கையேடு பக்கம் - 38