Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

ஜல்லிக்கட்டு

Jallikattu

வகை

போட்டி, பந்தயம்


திறன்

உடல் திறன் மற்றும் அறிவுத்திறன்


களம்

பொதுவெளி


பாலினம்

ஆடவர்


ஊர்

அலங்காநல்லூர்

மாவட்டம்

மதுரை

தருணங்கள்
தை மாதம் மூன்றாம் தேதி (மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள்)
கால அளவு
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
பங்கேற்பாளர்கள்
குழு
தகுதிகள்
18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்துகொள்ள முடியும்.
விதிமுறைகள்

போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகள் மற்றும் வீரர்கள் குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே பதிவு செய்யப்படுகின்றன. மதுரை அலங்காநல்லூரில் வாடிவாசலானது ‘சுத்துவாடி’ எனப்படும். வாடிவாசல் வழியாக வெளியேறும் காளை நிற்காமல் நேரடியாக ஓடக்கூடியதாக இருந்தால், மாடு பிடி வீரர் காளையின் திமிலைத் தழுவியபடி 50 அடி தூரத்திற்குச் செல்ல வேண்டும். காளை நின்று விளையாடும் தன்மை கொண்டதாக இருப்பின், மாடுபிடி வீரர் அதன் திமிலைத் தழுவியவாறு, காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை கீழே விழுந்து விடாமல் திமிலை அணைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாடுபிடி வீரர் வென்றதாக அறிவிக்கப்படுவார். இல்லையெனில் காளை வென்றதாக அறிவிக்கப்படும்.

மாடு களத்தில் அவிழ்த்து விடப்படும்போது அவ்விடத்தில் 30 முதல் 50 வீரர்கள் உள்ளனர். மாட்டின் கொம்பு, வால், மூக்கணாங்கயிறு போன்றவற்றைப் பிடிக்க வீரர்களுக்கு அனுமதி இல்லை. அவற்றின் கால்களைக் கட்டிப்பிடித்து அதனை நகரவிடாமல் தடுக்கவும் கூடாது. மாட்டை அடக்கும் இளைஞர்களுக்கு உடல்தகுதித் தேர்வு செய்யப்படுகிறது.

பரிசு
மாட்டைப் பிடிக்கும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டின் விதிமுறைப்படி காளையைப் பிடிக்கும் வீரருக்கு நான்கு புள்ளிகள் தரப்படும். பிடிப்படாத காளைகளுக்கு நான்கு புள்ளிகள் தரப்படும். விழாவின் இறுதியில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற காளைகளுக்கும் காளையர்களுக்கும் (மாடுபிடி வீரர்களுக்கும்) பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படுகின்றன. முற்காலத்தில் மாடுபிடி வீரர்களுக்கு வேட்டி, துண்டு, பானை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது அலமாரி, கட்டில், மிதிவண்டி, தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்

பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் / கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களிடம் ஏறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் வீர விளையாட்டாகவும் திருமண உறவோடு தொடர்புடைய விளையாட்டாகவும் இலக்கியங்களில் கூறப்படுகிறது. சங்க இலக்கியமான கலித்தொகையிலும் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சில மனிதர்கள் காளைகளைத் துரத்துவது போன்ற காட்சிகளுடன் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. சிந்து சமவெளியின் முத்திரை ஒன்றில், திமில் உள்ள காளை ஒன்று தன்னை அடக்க வரும் வீரர்களைத் தூக்கி வீசிப் பந்தாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்துக் கட்டி மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்றும் ஆனது.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புலிக்குளம், காங்கேயம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் ஆகிய ஐந்து நாட்டு மாட்டு இனங்களும் ஜல்லிக்கட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளன. வாடிவாசலைத் திறந்ததும் யார் கையிலும் பிடிபடாமல் பாய்ந்தோடும் காளையைப் 'போக்குக் காளை' அல்லது 'போக்கு மாடு' என்றும், களத்தில் நின்று சுழன்று விளையாடும் காளையைச் 'சுற்றுக்காளை' அல்லது 'சுற்று மாடு' என்றும் அழைக்கின்றனர். போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்குச் சந்தையில் அதிகக் கிராக்கி ஏற்பட்டு, அதிக விலை கிடைக்கும். அவை மாடுகளின் இனப்பெருக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

நடைபெறும் நேரம்
பகல்
தகவல்

முனைவர் மகாலிங்கம்

குறிப்புகள்

தமிழும் திமிலும்'- திரு க.த.காந்திராஜன், முனைவர் த.சாவித்திரி

புகைப்படங்கள்

M.Rajeshwari, P.Priya

M.Rajeshwari, P.Priya

M.Rajeshwari, P.Priya

M.Rajeshwari, P.Priya

M.Rajeshwari, P.Priya

M.Rajeshwari, P.Priya

M.Rajeshwari, P.Priya

M.Rajeshwari, P.Priya